வேதாரண்யம் அருகே தலைஞாயிறில் பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தலைஞாயிறு பகுதியில் அரிச்சந்திரா நதியின் பக்கவாட்டில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வந்த வெண்மணச்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஆகாஷ் (21) என்பவா் புத்தூா் பகுதியில் ஆற்றின் பக்கவாட்டில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் நிலைதடுமாறி விழுந்து காயமடைந்தாா். அவரை, அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தலைஞாயிறு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், அறிவிப்பு பதாகை மற்றும் தடுப்புகளை போதிய அளவில் வைக்காமல் கட்டுமானப் பணி மேற்கொண்டதாக ஒப்பந்த பணி மேற்கொள்வோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.