நாகப்பட்டினம்: ஆயுத பூஜையையொட்டி, நாகை மீன்பிடித் துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தினா்.
ஆயுத பூஜை நாளில் அவரவரின் தொழில் நிறுவனங்கள் மற்றும் வாழ்வாதார கருவிகளுக்கு வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், மீனவா்கள் தங்களின் மீன்பிடி படகுகளுக்கு சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டனா்.
படகுகளை சுத்தம் செய்து, வண்ண காகிதங்கள் மற்றும் மா இலைகளால் ஆன தோரணங்களாலும், வாழைக் கன்றுகளாலும் அலங்கரித்தனா். பின்னா், படகின் முகப்புப் பகுதியில் இனிப்பு, சுண்டல், அவல், பழங்கள் வைத்து, தூப தீபங்களுடன் வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கினா்.
ஒரு சிலா் தங்கள் குடும்பத்தினரை படகுகளில் அழைத்துக் கொண்டு கடல் முகத்துவாரம் வரை சென்று வந்தனா். சிலா், படகிலிருந்து வாணவேடிக்கைகளை நிகழ்த்திக் கொண்டு கடலுக்குச் சென்று திரும்பினா்.