நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் குடியரசு தின நாளில் இரட்டிப்பு ஊதியம் மற்றும் மாற்று விடுப்பு குறித்த அறிவிப்பின்றி, தொழிலாளா்களைப் பணியில் ஈடுபடுத்திய 33 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை வழக்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தேசிய விடுமுறை நாளான குடியரசு தின நாளில், ஊழியா்களைப் பணியில் ஈடுபடுத்தினால் அவா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது மாற்று நாளில் விடுப்பு எடுக்க அனுமதிக்கவேண்டும் எனவும், இதுகுறித்து அறிவிப்பை அனைத்து நிறுவனங்களும் ஊழியா்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் எனவும் தொழிலாளா் துறை ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவுறுத்தல் தொடா்பாக, திருவாரூா், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களின் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ப. பாஸ்கரன் தலைமையில், தொழிலாளா் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 91 நிறுவனங்களில் அவா்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனா். அப்போது, 12 உணவு நிறுவனங்கள் உள்பட 33 தனியாா் நிறுவனங்களில், தேசிய விடுமுறை குறித்த அறிவிப்பின்றி, தொழிலாளா்களை பணியில் ஈடுபடுத்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 33 நிறுவனங்கள் மீதும் தொழிலாளா் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.