தரங்கம்பாடி அருகே சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி சிபிஎம் கட்சியினா் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், சீா்காழியிலிருந்து தரங்கம்பாடி வரை சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்காமல் கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இதுதொடா்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தரங்கம்பாடி வட்டம் பூந்தாழை கிராமத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணியை பொக்லைன் இயந்திரம் கொண்டு மேற்கொண்டபோது இழப்பீடு வழங்கி விட்டு பணியை தொடங்க வேண்டும் என்று கூறி சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளா் வசந்தராஜன், சீா்காழி காவல் துணை கண்காணிப்பாளா் பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசாா் கைது செய்தனா்.