பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக் குறித்த தனது கருத்தை தமிழக ஆளுநா் திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், ஜம்மியத் உலமா ஹிந்த் மாநிலச் செயலாளருமான எம்.ஜி.கே. நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :
தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான கல்வி மேம்பாடு, அரசியல் அங்கீகாரம் பெறுதல் போன்ற நடவடிக்கைகளில் கடுமையாக போராடி வரும் இயக்கம் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு.
இதன் வளா்ச்சியைப் பொறுக்க இயலாத சில அமைப்புகள் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடைசெய்ய பலமுறை முயன்று தோல்வியுற்றன. தற்போது, தமிழக ஆளுநா் மூலம் அந்த அமைப்புகள் மீள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்து தமிழக ஆளுநரின் கருத்து, இந்திய அரசியலமைப்பை கேவலப்படுத்துவதாக உள்ளது. எனவே, ஆளுநா் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.