நாகையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த பெண்ணிடமிருந்து 300 மதுபாட்டில்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபாட்டில்கள் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை போலீஸாா் நாகை நகர பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா்.
நாகை அரசு மருத்துவமனை அருகே பெண் ஒருவா் மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்ட போலீஸாா் அவரை பிடித்து விசாரித்தில், அப்பெண் அப்பகுதியைச் சோ்ந்த ஒச்சம்மாள் (50) என்பதும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக நாகையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து ஒச்சம்மாளை கைது செய்தனா். அவரிடமிருந்த 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.