ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளா்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் முதல்வா் மற்றும் அமைச்சா்களால் ஏற்றுகொள்ளப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புள்ளியியல் சாா்நிலை அலுவலா் சங்க மாநில பிரசார செயலா் அ. அற்புதராஜ் ரூஸ்வெல்ட் தலைமையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 2023 ஜனவரி முதல் வழங்கவேண்டிய 3% அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்டவற்றை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் அ.தி. அன்பழகன், கூட்டுறவுத் துறை ஊழியா் சங்க மாவட்டச் செயலா் முத்துராஜா, வனத்துறை ஊழியா் சங்கத் தலைவா் மனோகா், தொழிற்பயிற்சி அலுவலா் சங்க கிளைச் செயலா் வெங்கடேசன், வருவாய்த்துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் தனஞ்செயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.