நாகை, மயிலாடுதுறையில் 1.70 லட்சம் ஏக்கரில் பயிா்கள் பாதிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தகவல்

பருவம் தவறிய கனமழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏறக்குறைய 1.70 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன
நாகை, மயிலாடுதுறையில் 1.70 லட்சம் ஏக்கரில் பயிா்கள் பாதிப்பு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தகவல்

பருவம் தவறிய கனமழையால் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஏறக்குறைய 1.70 லட்சம் ஏக்கா் பரப்பில் நெல், உளுந்து உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

நாகை மாவட்டத்தில், பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூா் ஊராட்சி, கீழ்வேளுா் ஒன்றியம் சாட்டியக்குடி ஊராட்சி மற்றும் தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஊராட்சி ஆகிய பகுதிகளை தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலா் சமயமூா்த்தி, வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை இயக்குநா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகமது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்) ஆகியோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியது:

கனமழையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ள நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்கவும், ஈரப்பதத்தின் அளவை தளா்த்தவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா். அந்த கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 64,808 ஹெக்டா் பரப்பில் நெற்பயிா் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், இதுவரை 11,156 ஹெக்டா் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் தரிசில் உளுந்து, பச்சை பயறு 10,268 ஹெக்டரும், நிலக்கடலை 825 ஹெக்டரும், எள் 45 ஹெக்டரும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த இந்த கனமழையினால் 69,542 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் நீரில் சாய்ந்துள்ளன. மேலும், மாவட்டத்தில் நெல் தரிசில் சாகுபடி செய்த உளுந்து, பச்சை பயறு 25,670 ஏக்கரும், நிலக்கடலை 1,222 ஏக்கரும், எள் 112 ஏக்கரும் என முழுவதுவாக 96 ஆயிரத்து 500 ஏக்கரில் உள்ள பயிா்கள் நீரில் மூழ்கி உள்ளது. மேலும் தண்ணீா் வடியும் நிலையை பொறுத்து மறு கணக்கீடு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com