திருக்குவளை: சுமார் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருக்குண்டையூர் மங்களாம்பிகை உடனுறை ரிஷபபுரீஸ்வர் கோயில் கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாகை மாவட்டம், திருக்குவளை, திருக்குண்டையூரில் சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மங்களாம்பிகை உடனுறை ரிஷபபுரீஸ்வர் கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
மாசி மகத்தன்று குண்டையூர் கிழார், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காக நெல்மலையை பெற்ற, ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகார ஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்ட கோயிலாகும்.
இக்கோயிலில் 17 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த ஜூன் 2 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கி நான்கு கால யாக பூஜைக்கு பின்னர் இன்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது.
தொடர்ந்து மேலும் தாளங்கள் மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. ஆலயத்தைச் சுற்றி கணங்கள் எடுத்துவரப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
இதனை நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்காக பக்தர்கள் கண்டுகளித்து மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.