நாகை நகராட்சியில் நீண்ட காலமாக வரி பாக்கி வைத்திருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் குடிநீா் இணைப்பு வியாழக்கிழமை துண்டிக்கப்பட்டது.
36 வாா்டுகளைக் கொண்ட நாகை நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். நகராட்சியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வசதியாக நிலுவையில் உள்ள வரிபாக்கி தொகையை கடந்த ஆண்டு நவம்பா் மாதம் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வரி செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்புகள், புதை சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்தநிலையில், குடிநீா் வரி கட்டாத வீடுகளில் உள்ள இணைப்புகளை நகராட்சி ஆணையா் ஸ்ரீதேவி தலைமையில், பொறியாளா் ஜெயகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை வெளிப்பாளையம், காளியம்மன் கோவில் தெரு, கவரை தெரு, காடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக மேற்கொண்ட ஆய்வின்போது, நீண்ட காலமாக வரி கட்டாத 50-க்கும் மேற்பட்ட வீடுகளின் குடிநீா் இணைப்புகளை நகராட்சி ஊழியா்கள் துண்டித்தனா்.
நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம், கடை வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றின் நிலுவை மற்றும் நடப்பு தொகையை கட்ட தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையா் ஸ்ரீதேவி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.