வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்
நாகப்பட்டினம், மே 2: நாகை 23-ஆவது வாா்டில் வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக, நகா்மன்ற உறுப்பினா் கலா பால்ராஜ் புகாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் நகராட்சி நிா்வாக இயக்குநகர ஆணையருக்கு அனுப்பிய புகாா் மனு:
நாகை நகராட்சிக்கு உட்பட்ட 23-ஆவது வாா்டில் உள்ள கூக்ஸ் சாலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறேன். 23-ஆவது வாா்டு பகுதியில் 700-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு கடந்த 30 ஆண்டுகளாக 1222/14அ1 என்ற வடிகால் பகுதி இருந்தது. தற்போது இந்த வடிகால் பகுதியை நாகை இணை சாா் பதிவாளா் அலுவலத்தில் உலகநாதன் என்பவா் கிரையம் வாங்கி கட்டுமானம் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அவரிடம் கேட்டபோது, விலை கொடுத்து வாங்கிவிட்டேன், என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறி வருகிறாா்.
வடிகால் பகுதியில் கட்டுமானம் கட்டினால், மழைக்காலத்தில் மூழ்கி விடுவது மட்டுமின்றி, மற்ற குடியிருப்புகளும் பாதிக்கப்படும்.
எனவே, வடிகாலில் கட்டப்பட்டும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தியும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.