திருவாரூர் தியாகராஜர் கோயில் அருகிலுள்ள பழைமையான துருவாச நாயனார் கோயிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் கீழவீதி தேரடி அருகில் அமைந்துள்ளது துருவாச நாயனார் கோயில். இங்கு தினமும் மாலை நேரம் மட்டும் ஒரு கால பூஜை நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 1995-ஆம் ஆண்டு நடைபெற்றது. தற்போது கோயிலின் வடக்கு, கிழக்குப் பகுதி மதில் சுவர் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. தவிர கோயிலுக்குள் சந்திர தீர்த்தக் குளம், உறை கிணறு ஆகிய இடங்களில் செடிகள் வளர்ந்துள்ளன. கோயிலின் ராஜகோபுரம் கடந்த 2006-ஆம் ஆண்டு ஆழித் தேரோட்டத்தின்போது சேதமடைந்தது. இதுவரை கோபுரம் சீரமைக்கப்படவில்லை.
பழைமையான இக்கோயிலை பரவை நாச்சியார் கட்டியதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. சமயக் குரவர்களில் ஒருவரான சுந்தரர் இக்கோயிலில் பதிகம் பாடியுள்ளார். சுந்தரர் திருவெற்றியூரில் சங்கிலி நாச்சியார் என்பவரை முதல் திருமணம் செய்து கொண்டுள்ளார். அடுத்து திருவாரூரில் பரவை நாச்சியாரை 2-ஆவது திருமணம் செய்து கொண்டாராம். இதையறிந்த முதல் மனைவி சங்கிலி நாச்சியார் சாபமிட்டதால் சுந்தரருக்கு இருக்கண்கள் பார்வையற்றுப் போனதாகவும், திருவெற்றியூரில் அவர் பாடல் பாடி ஒரு கண்ணில் பார்வை பெற்றதாகவும், மற்றொரு கண் பார்வை திருவாரூரில் பாடல்பாடி பெற்றதாகவும் புராணச் செய்திகள்
கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயில் தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. கோயிலுக்கென்று திருவாரூர் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் 100 ஏக்கருக்கு மேல் நிலங்கள் உள்ளன. எனவே, இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொண்டு, கோயில் மதில் சுவர் உள்ளிட்டவற்றை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கனகசபாபதி என்ற பக்தர் கூறியது: பழைமையான இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவாதிரை நாளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளாக இந்நிகழ்வு நடைபெறவில்லை. அதேபோல் 1995-க்குப் பிறகு கும்பாபிஷேகம் நிகழவில்லை.
தற்போது, சிவனடியார்கள் பூஜை செய்து வருகின்றனர். கோயிலுக்கென தனி குருக்களை நியமித்து பூஜை செய்யவும், கும்பாபிஷேகம் நடத்தவும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.