தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தாகம் தணிப்போம் நிகழ்ச்சி, போலீஸாருக்கு ஊக்கமளிக்கும் என, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஜான் ஜோசப் பாராட்டு தெரிவித்தார்.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் நடைபெற்ற தாகம் தணிப்போம் நிகழ்ச்சியில் திங்கள்கிழமை பங்கேற்ற அவர் மேலும் பேசியது:
வெயிலாக இருந்தாலும் பணி புரிவது காவலர்களே. அவர்களது பணி நிலைமையைக் கருத்தில் கொண்டு, குடிநீரும், குளிர்பானங்களும் வழங்க முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது. இதன்மூலம் போலீஸாரின் களைப்பு தீர்வதோடு, நல்ல ஊக்கமும் கிடைக்கிறது. தினமணி செய்யும் இந்த சேவை ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர். ஜான்ஜோசப், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் கல்விக் குழுமங்களின் தாளாளர் முனைவர் சு. வெங்கடராஜலு ஆகியோர் போக்குவரத்து காவலர்களுக்கு குடிநீர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் எம். சிவாஜி, நேதாஜி மகளிர் கல்லூரியின் துணை முதல்வர் இரா. அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து விளமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் தண்ணீரும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எக்ஸ்பிரஸ் குழுமம் நாகை பதிப்பு துணை மேலாளர் எல். வெங்கடேஸ்வரன், விற்பனைப் பிரிவு அதிகாரி எஸ். வதனமூர்த்தி, திருவாரூர் பகுதி விற்பனை அலுவலர் ஜே. சத்யா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.