கூத்தாநல்லூர் சாய் பாபா கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
லெட்சுமாங்குடி மரக்கடை ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபாவுக்கு, நிர்வாகி வெள்ளையன் மற்றும் பக்தர்களின் ஏற்பாட்டின்பேரில் மஞ்சள் பொடி, தயிர், இளநீர், பன்னீர், பால், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பின், அலங்கரிக்கப்பட்ட சாய் பாபாவுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், சித்தாம்பூர் ஷீரடி சாய் பாபாவுக்கும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி கோயிலில்...
நீடாமங்கலம், ஏப். 25: நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைமுன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குரு பகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், கெஜலெட்சுமி, துர்கையம்மன், உற்சவர் தெட்சிணாமூர்த்தி, சுக்கிரவார அம்மன், சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.