திருவாரூர் மாவட்டத்தில் 2.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
By DIN | Published On : 12th February 2019 09:07 AM | Last Updated : 12th February 2019 09:07 AM | அ+அ அ- |

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 2.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 290 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது என திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் கி. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
திருவாரூர் நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் நெல் கொள்முதல் தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மேலும் அவர் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி ஆகிய இரு மண்டலங்களில் மொத்தம் 436 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விவசாயிகளிடமிருந்து இதுவரை 2.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.290 வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படுவதை கொள்முதல் அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் தொடர்பாக புகார்கள் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் முதுநிலை மண்டல மேலாளர் 9442255542, மேலாளர் (தரக்கட்டுப்பாடு) 9080970094, துணை மேலாளர்(திருவாரூர்)- 9095333229, துணை மேலாளர் (மன்னார்குடி)-9487171815 ஆகிய செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார்.
கூட்டத்தில், நெல் கொள்முதல் பணிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாடு, தினசரி நெல் கொள்முதல் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இயக்கம், விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைப்பது மற்றும் காலி கோணிப் பைகள் இருப்பு உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.