நிவாரணம் மறுப்பு: சாலை மறியல்
By DIN | Published On : 04th January 2019 08:26 AM | Last Updated : 04th January 2019 08:26 AM | அ+அ அ- |

திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலைக் காரணம் காட்டி, கஜா புயல் நிவாரணம் மறுக்கப்படுவதைக் கண்டித்து, முத்துப்பேட்டை அருகே பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தில்லைவிளாகம் ஊராட்சிக்குள்பட்ட துரைத்தோப்பு கிராமம் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியில், நூற்றுக்கணக்கான குடும்பத்தினருக்கு கஜா புயல் நிவாரணம் வழங்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து, துரைத்தோப்பு ஐயனார் கோயில் அருகே முத்துப்பேட்டை- வேதாரண்யம் சாலையில் அப்பகுதி பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை போலீஸார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.