கூத்தாநல்லூர் அருகே புயல் நிவாரணம் வழங்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
கஜா புயல் நிவாரணம் கோரி குடிதாங்கிச்சேரியில், திருவாரூர்- மன்னார்குடி சாலையில், சுமார் 200 பேர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் செல்வி, திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், தற்போது தன்னால் நிவாரணம் வழங்க இயலாது என்றும், தேர்தல் அதிகாரியிடமிருந்து மறு உத்தரவு வந்ததும் நிவாரணம் பெற்றுத் தருவதாகவும் கூறிவிட்டு சென்றார்.
எனினும், இதில் சமரசம் அடையாத அவர்கள், சாலை மறியலைத் தொடர்ந்தனர். இதைத்தொடர்ந்து, குடிதாங்கிச்சேரி தெற்குத் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (30), சுரேஷ் (33), திராவிடச்செல்வி (32 ), சுசிலா, உள்ளிட்ட 7 பேர் மீது கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
மறியல் காரணமாக திருவாரூர்- மன்னார்குடி சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.