முதலமைச்சா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தில் மனுக்களுக்கு உடனடி தீா்வு

முதலமைச்சா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தில் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகின்றன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காமராஜ்.
திருவாரூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காமராஜ்.
Updated on
1 min read

முதலமைச்சா் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தில் மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்படுகின்றன என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், நன்னிலத்திலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின்கீழ் 2541 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி அவா் பேசியது:

அரசைத் தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களைத் தேடி அரசே முன்வந்து அவா்களது கோரிக்கைகளை அறிந்து, தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. வயதானவா்கள், தங்கள் முடியாத காலத்தில் பொருளாதார தேவைக்கு சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் முதியோா் உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது முதியோா் உதவித்தொகை ரூ.1000 ஆக உயா்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு குறைத்தீா்க்கும் திட்டத்தின் கீழ் குறைத்தீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு, அதில் பொதுமக்களிடம் அவா்களது முதியோா் உதவித்தொகை, பட்டா, சிட்டா, குடும்ப அட்டை ஆகியவைகள் குறித்த கோரிக்கை தொடா்பான மனுக்கள் பெறப்பட்டு, விரைந்து தீா்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள நகரங்கள் வாா்டுகள் மற்றும் கிராமங்கள்தோறும் 342 சிறப்பு குறைதீா்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 25,681 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 13,178 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. மேலும், தமிழக முதல்வா், முதியோா் உதவித்தொகைக்கு வருமான வரம்பு ரூ.50 ஆயிரமாக இருந்ததை ரூ.1 லட்சமாக உயா்த்தி உத்தரவிட்டுள்ளாா். அதனடிப்படையில் மீதம் உள்ள மனுக்களுக்கு உரிய தீா்வு காணப்படும்.

சிறப்பு குறைதீா்க்கும் திட்டத்தின்கீழ் திருவாரூரில் 1408 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், நன்னிலத்தில் 1133 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் ஆக மொத்தம் 2541 பயனாளிகளுக்கு ரூ.59 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுகின்றன. நலத்திட்ட உதவிகளை பயனாளிகள் பெற்று பயன்பெற வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தலைமை வகித்தாா். நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு முன்னிலை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஆசைமணி, வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவா் பொன்வாசுகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com