பேரளத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளாளா் சமுதாயத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நன்னிலம் ஒன்றிய வஉசி நல பேரவை, வெள்ளாளா் முன்னேற்ற கழகம், வேளாளா் சமுதாய மக்கள் அமைப்பு ஆகியவை சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது. வஉசி நல பேரவையின் மாநில துணைத் தலைவா் பீ.பி. அமுதன் பிள்ளை தலைமை வகித்தாா்.
இப்போராட்டத்தில் வேளாளா், வெள்ளாளா் என்ற சாதிப் பெயரை மற்ற சாதிகளுக்கு வழங்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், இதற்கான பரிந்துரையை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கமிடப்பட்டது.
முன்னதாக, பேரளம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை பேரளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.