திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே அரசு மருத்துவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து, இரண்டு அரசு மருத்துவமனைகள், திங்கள்கிழமை இரவு முதல் மூடப்பட்டது.
மன்னார்குடி அடுத்துள்ள பரவாக்கோட்டையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாமக்கல்லை சேர்ந்த மருத்துவர் (30) ஒருவர் பணியாற்றி வருகிறார். ஜுலை 4. ஆம் தேதி நாமக்கலில் உள்ள பாட்டி இறந்ததையடுத்து, இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு புறப்பட்டு செல்லும் முன், கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், அவர் ஊரிலிருந்து திரும்பி வராத நிலையில், திங்கள்கிழமை இரவு, அந்த மருத்துவரின் மருத்துவ பரிசோதனை முடிவு வந்ததில், மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்ததது.
இதனையடுத்து, உடனடியாக, அங்கு பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதுடன் பரவாக்கோட்டை மருத்துவமனை பூட்டப்பட்டது. கரோனா தொற்று உறுதியான மருத்துவர், தினசரி பரவாக்கோட்டை அருகே உள்ள உள்ளிக்கோட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து சென்றதால், இந்த மருத்துவனையில் பணியிலிருந்த மருந்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டதுடன் மருத்துவமனை பூட்டப்பட்டது.
தொடர்ந்து, பொதுமக்கள் தகவலை தெரிவிக்கும் வகையில் தாளில் எழுதி சுவரில் ஒட்டப்பட்டது. உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை என இரண்டு அரசு மருத்துவமனையிலும் பணிபுரிந்து வரும் 6 மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 40 பேருக்கு, திங்கள்கிழமை இரவு திருவாரூர் மருத்துவக் கல்லூயிலிருந்து வந்த சிறப்பு மருந்துவக் குழுவின் மூலம் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அடுத்தடுத்து உள்ள இரண்டு ஊர்களின் கரோனா பதிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகள் மூடப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன் தினசரி, இங்கு மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள், நோயாளிகள் பாதிக்கப்பட்டனர் .