கூத்தாநல்லூா்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்காடி வாயிலாக குடும்பத்துக்கு தலா 5 முகக் கவசங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்டச் செயலாளா் டி.எம்.ஹெச். அப்துல் ராஜிக் கூத்தாநல்லூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க அங்காடிகளில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முகக் கவசங்களும், கபசுர குடிநீா் பொடியும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது போதுமானது அல்ல. ஒரு குடும்பத்துக்கு குறைந்தது 5 முகக் கவசங்களும், கைகளைக் கழுவுவதற்கு ஒரு சோப்பும் வழங்கப்பட வேண்டும். திருவாரூா், மன்னாா்குடி, தஞ்சாவூா் உள்ளிட்ட நகரங்களில் முகக் கவசங்கள் பாதுகாப்பில்லாமல் திறந்த வெளியில் விற்கப்படுகின்றன. இதை நெறிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.