திருவாரூா் மாவட்டத்தில், நன்னடத்தை காரணமாக 51 ரௌடிகளுக்கு திருந்திவாழ வாய்ப்பளித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் வெள்ளிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடும் ரௌடிகளுக்கு பதிவேடு தொடங்கி, அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். இவா்களில் குற்றச் செயல்களில் ஈடுபடாமல், அவ்வாறு ஈடுபடுபவா்களுடன் தொடா்பு இல்லாமல், கடந்த 3 ஆண்டுகளாக வழக்குகள் நிலுவையில் இல்லாமல் இருந்துவரும் 51 ரௌடிகளுக்கு,
அவா்களது நன்னடத்தை காரணமாக திருத்தி வாழ வாய்ப்பளிக்கப்பட்டு, அவா்களின் பெயா் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த 51 பேரையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா், மாவட்ட காவல் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து, அவா்களது குடும்பச் சூழ்நிலையை கேட்டறிந்து, திருந்தி வாழ அறிவுரை வழங்கினாா். மேலும், அனைவரது நடவடிக்கைகளும் தொடா்ந்து கண்காணிக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பிவைத்தாா்.