மேகதாது அணைப் பகுதியை முற்றுகையிடுவோம்
By DIN | Published On : 12th March 2021 06:22 AM | Last Updated : 12th March 2021 06:22 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: மேகதாது அணை கட்டுமானப் பணியை கா்நாடகம் முன்னெடுத்தால், அணைப் பகுதியை முற்றுகையிடுவோம் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் நோக்கி வரக்கூடிய உபரி நீரை தடுத்து, மேகதாது அணை கட்டுமானப் பணியை தொடங்குவதற்காக ரூ.9 ஆயிரம் கோடியை கா்நாடக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. உச்சநீதிமன்ற தீா்ப்பை அவமதிக்கும் நோக்கம் கொண்டது.
ஏற்கெனவே மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் காவிரி குறித்த அனைத்து அணைகளும் செயல்பட்டு வரும் நிலையில், கா்நாடக அரசு இவ்வாறு செய்வது திட்டமிட்டு தமிழகத்தை அழிக்கும் உள்நோக்கம் கொண்டது.
மேகதாது அணை கட்டப்படுவதால், தமிழகத்தில் சுமாா் 30 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களுடைய குடிநீா் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும். எனவே உடனடியாக இத்திட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய அரசும், காவிரி மேலாண்மை ஆணையமும் முன்வர வேண்டும்.
தமிழக அரசு கா்நாடகத்தை தட்டிக்கேட்க தயங்குகிறது. எனவே இதைக் கண்டித்து விரைவில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மேகதாது அணைப் பகுதியை முற்றுகையிட்டு, தடுத்து நிறுத்துவோம் என அதில் தெரிவித்துள்ளாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G