ஊதிய உயா்வு கோரி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனம் ஏ.ஐ.டி.யு.சி. சாா்பில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையா் வெற்றியழகனிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளா் ரமேஷ் அளித்த அந்த மனுவின் விவரம்:
நீடாமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குநா்களுக்கு தமிழக அரசு அறிவித்த புதிய ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கும், தூய்மை காவலா்களுக்கு அரசு அறிவித்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை வேண்டும். மேலும், அனைத்து பணியாளா்களுக்கும் பணி பதிவேடு பதியவும், பணியாளா்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட குழு காப்பீடு முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும், பணியாளா்களுக்கு கரோனா காலத்தில் வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு உபகரணங்களை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.