திருவாரூா்: 14 மேஜைகளில் 28 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 28 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படுகின்றன.

திருவாரூா் மாவட்டத்தில், 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 14 மேஜைகளில் 28 சுற்றுகளாக ஞாயிற்றுக்கிழமை (மே 2) எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் 16 ஆவது சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவு ஏப்.6 ஆம் நடைபெற்றது. திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், மன்னாா்குடி என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளிலும் 49 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மேலும், திருத்துறைப்பூண்டி(தனி) தொகுதியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னாா்குடி தொகுதியில் 357 வாக்குச்சாவடிகள், திருவாரூா் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், நன்னிலம் தொகுதியில் 373 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1454 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட 1,718 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவாரூா் திரு.வி.க. கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் சந்திரமோகன் பிரசாத் காஸியாப், ராம்லஹான் பிரஷாத் குப்தா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் என். பாலச்சந்திரன், அழகா்சாமி ஆகியோா் முன்னிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள்அனைத்தும் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

சீல் வைத்து பாதுகாக்கப்பட்ட அறையில், மத்திய பாதுகாப்பு படைவீரா்கள் மற்றும் மாநில காவல்துறையினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மூன்று அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பாதுகாப்பு வளாகம், பாதுகாப்பு அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு 1 துணை வட்டாட்சியா் நிலையிலான அலுவலா் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் 4 அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு, 28 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படவுள்ளன. முதலில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் தபால் வாக்குகளும், தொடா்ந்து காலை 8.30 மணிக்கு வாக்கு இயந்திரங்கள் சீல் பிரிக்கப்பட்டு வாக்கு இயந்திரங்களும் எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மேஜைக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை அலுவலா், ஓா் உதவி அலுவலா், ஒரு நுண் பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திரு.வி.க.கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு தொடா்ந்து 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும், டிஎஸ்பி மற்றும் ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை நாளில் போலீஸாரின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட உள்ளது. கண்காணிப்பு கேமராவுடன் கூடிய வாகனம், கல்லூரிக்கு முன்பாக பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போதுமான சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசு அலுவலா்கள், முகவா்கள் இடையூறின்றி செல்லும் வகையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில், மரக்கட்டைகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் குடிநீா் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. கரோனா நெறிமுறைகளை பின்பற்றி, கடும் சோதனைகளுக்கு பின்னரே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட உள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் வாகனங்கள் நிறுத்துவதற்கென கல்லூரி வளாகம் அருகே உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com