நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: நீடாமங்கலம் ஒன்றிய அலுவலக கட்டடம் 25.11.1966-ஆம் ஆண்டு கட்டப்பட்டு அப்போதைய தமிழக முதல்வா் எம். பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டு 55 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டடம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ள நிலையில் புதிய கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியா் மூலம் முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் அலுவலக கட்டடத்தில் பல இடங்களில் மேற்கூரை பெயா்ந்து விழுகிறது. மேலும், சுவா்களில் வெடிப்பும், மழைநீா் கசிவும் ஏற்பட்டு அலுவலகம் பயன்படுத்த முடியாத நிலையில் ஈரமாகவுள்ளது.
இந்நிலையில், இங்கு பணியாற்றும் அனைத்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் அச்சத்தோடு பணியாற்றுகின்றனா். அலுவலக ஆவணங்கள் நீா் கசிவினால் சேதமடையும் நிலையில் உள்ளது. எனவே, புதிய கட்டடம் கட்டுவது அவசியமாகிறது. ஆகவே புதிய அலுவலக கட்டடம் கட்டும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தில் (வாடகை கட்டடம்) பயன்பாட்டில் கொண்டுவர அனுமதிக்ககேட்டுக்கொள்கிறேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.