நன்னிலம்: ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் நீதிபோதனை வகுப்புகளை நடத்திட வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நன்னிலம் அரசுக் கல்லூரி முன்பு திங்கள்கிழமை கண்ணில் கருப்புத் துணி அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தொடரும் பாலியல் குற்றங்களினால், மாணவிகளின் தொடர் மரணம் ஏற்பட்டு வருகிறது. எனவே பாலியல் குற்றங்களுக்கு எதிராக தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆசிரியர்களுக்கு நீதி போதனை மற்றும் உளவியல் ஆலோசனைகள் குறித்த பாடங்களை நடந்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆனந்த் தலைமையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கண்களில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் கல்லூரித் தலைவர் அஜய், மாவட்டக் குழு உறுப்பினர் பகத்சிங் உள்ளிட்ட நிர்வாகிகளும், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்திட வேண்டுமென வலியுறுத்தி நன்னிலம் அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் கண்களில் கருப்பு துணியை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்தப்படம்.