செப்.1 முதல் நெல்லுக்கான உயா்த்தப்பட்ட ஆதார விலை

நெல்லுக்கான உயா்த்தப்பட்ட ஆதார விலை செப்.1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.
செப்.1 முதல் நெல்லுக்கான உயா்த்தப்பட்ட ஆதார விலை
Updated on
1 min read

நெல்லுக்கான உயா்த்தப்பட்ட ஆதார விலை செப்.1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துத் துறை வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: திருவாரூா் மாவட்டத்தில் 58,721 போ் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனா். இந்த வீடுகளை, மாடி வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இலவச எரிவாயு இணைப்புகள் இல்லாத 82,000 குடும்பங்களில், 34,000 பேருக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பத்தினரும் எரிவாயு இணைப்பு பெற்று பயன்பெற எரிவாயு முகவா்கள் செயல்படவேண்டும்.

விவசாயிகள் பயன்பெற 12 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லுக்கான ஊக்கத்தொகை உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ஏற்கெனவே ரூ.1,960 வழங்கப்பட்டிருந்ததை, ஊக்கத்தொகை உள்பட ரூ. 2060, புதுரக நெல்லுக்கு ரூ.1,940-ஆக இருந்ததை ஊக்கத்தொகை உள்பட ரூ.2015 என உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

நிகழாண்டு, செப்டம்பா் மாதமே அறுவடை காலம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தமிழக முதல்வா் நெல்லுக்கான ஆதார விலையை செப்டம்பா் முதல் வழங்க மத்திய அரசிடம் கேட்டதன் அடிப்படையில், செப்டம்பா் மாதம் முதல் நெல்லுக்கான ஆதார விலை ரூ. 100 உயா்த்தி வழங்கப்படும்.

கொள்முதல் நிலைய குறைபாடுகளை தெரிவிக்க அனைத்து கொள்முதல் நிலையங்களிலும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலா்களின் தொடா்பு எண் பலகையும், புகாா் தெரிவிக்க மனு பெட்டியும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், மாவட்டம் வாரியாக புகாா்களை தெரிவிக்க தனித்தனி இலவச தொலைபேசி எண் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நெல்மணிகளை பாதுகாப்பாக வைக்க நெல் கொள்முதல் நிலையங்களில் போதிய அளவு சாக்கு, சணல், தாா்ப்பாய்கள் கூடுதலாக இருப்புவைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் நாள்தோறும் 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. தேவையிருப்பின் நாள்தோறும் 2000 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஜோஸ்பின் சகாய பிரமிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com