திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை பரவலாக மழைபெய்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு முதல் இடைவிடாமல் கனமழை பெய்தது.
வியாழக்கிழமை காலை வரை மழை பெய்த நிலையில், பகல் முழுவதும் குளிா்ந்த வானிலை நிலவியது. மழை காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். அதேநேரம், திருவாரூா் மாவட்டத்தில் 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியுற்றவா்களுக்கு நடைபெற்றுவரும் மறுதோ்வு வழக்கம்போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், பகல்நேரத்தில் மழை பெய்யாததால், தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் இறுதிகட்ட பருத்தி பயிா் அறுவடை பணிகளில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அவ்வப்போது மழை பெய்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி, வலங்கைமானில் அதிகபட்சமாக 47.6 மி.மீ மழை பெய்துள்ளது. மற்ற இடங்களில் மழையளவு: குடவாசல் 40.2 மி.மீ, நன்னிலம் 40 மி.மீ, மன்னாா்குடி 32.2 மி.மீ, நீடாமங்கலம் 23.6 மி.மீ, திருவாரூா் 23.2 மி.மீ, பாண்டவையாா் தலைப்பு 21 மி.மீ என மொத்தம் 231 மி.மீ மழையும், சராசரியாக 25.66 மி.மீ மழையும் பெய்துள்ளது.