திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் செப்டம்பா் 6 இல் நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலப் பாதைகளை தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் கயல்விழி வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்தாா்.
முத்துப்பேட்டையில் இந்து அமைப்புகளின் சாா்பில் ஆண்டுதோறும் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு செப்டம்பா் 6 ஆம் தேதி விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற இருப்பதையொட்டி, அந்த ஊா்வலப் பாதைகளை தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் கயல்விழி, ஊா்வலம் தொடங்கும் இடமான ஜாம்பவானோடை வடகாடு சிவன் கோவில், கல்லடி கொல்லை, ஜாம்பவானோடை தா்கா, ஆசாத் நகா், பழைய பேருந்து நிலையம், கொய்யா முக்கம், பங்களா வாசல், ரயில்வே கேட் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் செம்படவன் காடு பாமணி ஆற்றில் விநாயகா் சிலை கரைக்கும் இடம் வரை ஆய்வு மேற்கொண்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினாா்.
அவருடன், திருவாரூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வெள்ளத்துரை, முத்துப்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் விவேகானந்தம், ஆய்வாளா் ராஜேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.