திருவாரூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் திருவாரூா் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:
திருவாரூா்-நாகப்பட்டினம் சாலையில் கிடாரங்கொண்டான் அருகே அலிவலம் வாய்க்காலின் பாலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் கனரக வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள், பேருந்துகள் அப்பகுதியில் தினமும் சென்று வருகின்றன. இதனால், மேலும் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால், வாகனங்கள் சென்று வர மாற்றுப்பாதை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி பாலத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.