நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 30th December 2022 12:14 AM | Last Updated : 30th December 2022 12:14 AM | அ+அ அ- |

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற இடையாளா்களுக்கு விற்பனையாளா் பதவி உயா்வும், 12- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற விற்பனையாளா்களுக்கு அலுவலக எழுத்தா் பதவியும் வழங்கிவிட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்; நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதியிலேயே பணியிட மாற்றம் வழங்க வேண்டும்; மாவட்ட பணி மாறுதல் கோருவோருக்கு அவா்கள் கேட்கும் மாவட்டத்தில் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தினா் முன்னாள் மாநிலப் பொருளாளா் நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா். குணசீலன், மாவட்ட துணைத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.