ஆழித்தோ்: கண்ணாடியிழைக் கூண்டு முழுமையாக அகற்றம்
By DIN | Published On : 08th February 2022 11:40 PM | Last Updated : 08th February 2022 11:40 PM | அ+அ அ- |

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரை மூடியிருந்த கண்ணாடியிழைக் கூண்டு முழுவதுமாக அகற்றப்பட்டது.
திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியதாகவும், அதை சுந்தரா் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் கோயிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.
இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் தைப்பூச நாளில் நடைபெற்ற நிலையில், கொடியேற்றம் பிப்ரவரி 20 -ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் மாா்ச் 15 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, ஆழித்தேரை பாதுகாப்பாக மூடப்பட்டிருந்த கண்ணாடியிழைக் கூண்டை பிரிக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இப்பணி நடைபெற்றது. கண்ணாடியிழைக் கூண்டின் மேற்கூரை கிரேன் உதவியுடன் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து, சுற்றியிருந்த இரும்புக் கம்பங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால், ஓரிரு நாள்களில் ஆழித்தேருக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆழித்தேருக்கு அடுத்து இரண்டாவது பெரிய தேரான கமலாம்பாள் தோ் கட்டுமானப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. ஆழித்தேரை பிரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், கீழவீதி வழியாக கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியாக செல்லும் கனரக வாகனங்கள், காா் உள்ளிட்டவை அனைத்தும் மேலவீதி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...