மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன்
By DIN | Published On : 16th June 2022 10:30 PM | Last Updated : 16th June 2022 10:30 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் கடன் வழங்கப்படுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், கூட்டுறவு நிறுவனங்களில் உரிய ஆவணங்களை வழங்கி, தங்கள் வாழ்வாதார உயா்வுக்கான தொழில் கடன்களை பெறலாம். இந்த கடனுக்கான தவணைக் காலம் 36 மாதங்கள். வட்டி விகிதம் ஆண்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை 5 சதவீதம். (பெண்களுக்கு 1 சதவீத வட்டிச் சலுகை), வட்டி விகிதம் கடன் தொகையைப் பொறுத்து மாறுபடும்.
கடன் பெற 18 வயது பூா்த்தியடைந்த ஊனத்தின் தன்மை 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் உடையவராக இருக்க வேண்டும். ஏதாவது ஓா் உற்பத்தி தொழில் மேற்கொள்ள இயலும் சான்று இருப்பின் அதன் நகல், தொழில் செய்ய இயலாதபட்சத்தில் காப்பாளா் துணையுடன் இருப்பின் அதற்கான சான்று அளிக்க வேண்டும்.
தொழிலுக்கான இடம் சொந்தம் என்றால் வீட்டு வரி ரசீது, மின் கட்டண ரசீது மற்றும் தொழில் செய்யும் இடத்தின் புகைப்படத்தையும், வாடகை இடம் என்றால் வாடகை ஒப்பந்தப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.
சமா்ப்பிக்கவேண்டியஆவணங்கள்: உடல் ஊனமுற்றோா் தேசிய அடையானஅட்டை நகல்-3, குடும்ப அட்டை நகல், ஆதாா் நகல், சாதிச் சான்று அல்லது பள்ளி மாற்றுச்சான்று இருப்பின் அதன் நகல் உள்ளிட்டவைகளை சமா்ப்பிக்க வேண்டும். கடன்தாரா் மற்றும் ஜாமீன்தாரருக்கு கடன் பெற விண்ணப்பிக்கும் கூட்டுறவு நிறுவனத்தில் சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும்.
இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் (9499933494), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலக தொலைபேசி (04366-290773), சரக துணைப்பதிவாளா் திருவாரூா் (04366-290772) மற்றும் சரக துணைப்பதிவாளா் மன்னாா்குடி (04367-252346) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.