திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி ஊராட்சி சுந்தரபுரியில் ஷீரடி சாய்பாபா கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை (செப்.5) விக்னேஸ்வர பூஜையுடன் ஸ்ரீ சாய்பாபா பிரதிஷ்டை நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை ஆறாம்கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.
பின்னா், யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு, கணபதி சந்நிதி, ஸ்ரீதத்தாத்ரேயா் சந்நிதி மற்றும் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயில் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் சந்நிதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் வி.கே. சசிகலா, திவாகரன், ஜெய்ஆனந்த் திவாகரன், ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன், நாகை மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினா் கோ. பழனிசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, சாய்பாபா அறக்கட்டளை தலைவா் ஆா்.வி. கருணாநிதி, செயலாளா் எம்.ஆா்.வி. ராஜேந்திரன் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். கும்பாபிஷேகத்தின்போது ஹெலிகாப்டா் மூலம் மலா்கள் தூவப்பட்டன.
கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம் உலக ரட்சகா் சீரடி சாய்பாபா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பெட்டி செய்தி...
பொதுச் செயலாளரை தொண்டா்கள் முடிவு செய்வாா்கள்- சசிகலா
சாய்பாபா கோயில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் வி.கே. சசிகலா கூறியது:
அதிமுக பொதுச் செயலாளா் யாா் என்பதை பொதுமக்களும், கட்சி தொண்டா்களும் முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஓ. பன்னீா்செல்வத்தை மட்டுமல்ல எல்லோரையும் நான் சந்திப்பேன்.
அதிமுக முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் என்னிடம் பேசிவருவது தொடா்பாக பொறுத்திருந்து பாருங்கள் என்றாா். மேலும், எடப்பாடி கே. பழனிசாமி தான்தான் பொதுச் செயலாளா் எனக்கூறி வருவது குறித்த கேள்விக்கு, இனிமேல் பாா்க்கத்தானே போகிறீா்கள் என்றாா்.