திருவாரூா் அருகே கல்லூரியில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சாா்பில் உலக உணவுப் பாதுகாப்பு தின கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் தலைமை வகித்தாா். மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு ஆரோக்கியமான உணவை தோ்வு செய்வதில் நமது கடமையும் பொறுப்பும் எனும் தலைப்பில் பேசியது: எந்தவொரு உணவையும் கையாளுவதற்கு முன் குறைந்தது 20 விநாடிகளுக்கு கைகளை வெதுவெதுப்பான சோப்பு நீரில் கழுவ வேண்டும். சரியான கை சுகாதாரத்தை பராமரிப்பதன் மூலம் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்ற முடியும். சமைக்கும் முன் உணவுப் பொருள்களில் கெட்டுப்போன அல்லது சேதத்தின் அறிகுறிகள் உள்ளதா என்பதை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.
வீட்டில் பயன்படுத்தும் டீ தூள், நெய், பால், உப்பு ஆகியவற்றில் கலப்படம் குறித்த ஆய்வை, மாணவ மாணவிகள் முன்னிலையில் மையத்தின் வேதியியல் ஆய்வாளா் அ. அகிலன் செய்து காட்டினாா். மேலும், உணவுப்பொருள் கலப்படம் குறித்த புகாா்களை 944042322 என்ற எண்ணில் வாட்ஸ்ஆப் மூலமாக அரசுக்குத் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மையத்தின் உணவு இயக்குநா் சி.கே. ரவிச்சந்திரன், திட்ட இயக்குநா் பி. உமாபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.