கோடை உழவு மேற்கொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி, வயல்களில் கோடை உழவு செய்ய விவசாயிகளை ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் பெய்துவரும் கோடை மழையைப் பயன்படுத்தி, வயல்களில் கோடை உழவு செய்ய விவசாயிகளை ஆட்சியா் தி. சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

நெல் தரிசு நிலங்கள் அறுவடைக்குப் பிறகு குறுவை பருவம் வரை வெயிலில் காய்ந்து வெடிப்புகள் ஏற்படுகின்றன. பின்னா் குறுவைப் பருவத்துக்கு நிலம் தயாா் செய்யும்போது, அதிகமாக நீா்த் தேவையிருக்கும். கோடை உழவு செய்வதால், மண்ணின் நீா்ப்பிடிப்புத் தன்மை அதிகமாவதோடு மண் அரிப்பும் தடுக்கப்படுகிறது. கோடை உழவு செய்வதால் வயல்களில் வளா்ந்துள்ள களைச்செடிகள் மற்றும் அறுவடைக்குப் பின்னா் எஞ்சியிருக்கும் நெல் தாள்கள் மண்ணுடன் கலக்கப்பட்டு, மக்கி பயிருக்கு உரமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது.

மேலும், களைகளின் விதைகள் மற்றும் மண்ணின் மேற்பரப்புக்குக் கொண்டு வரப்பட்டு, வெயிலில் காய்ந்து அழிந்து விடும். கோடை உழவு செய்வதால் பூச்சிகளின் முட்டைகள் மற்றும் கூண்டுப்புழுக்கள் மண்ணின் அடிப்பகுதியிலிருந்து மேலே கொண்டு வரப்பட்டு, பறவைகளுக்கு இரையாக்கப்பட்டு அழிக்கப்படுகிறது. அத்துடன், நோய்களின் பெருக்கத்துக்கு காரணமாக உள்ள களைச்செடிகள் மற்றும் புற்கள் கோடை உழவால் அழிக்கப்படுகின்றன.

குறிப்பாக நெல் பயிரில் இலை அழுகல், இலைக் கருகல் மற்றும் தண்டு அழுகல் நோய்கள் தாக்கப்பட்ட வயல்களில் எஞ்சியிருக்கும் நெல் தாள்களில் நோய்க் கிருமிகள் தங்கியிருந்து அடுத்த பருவத்துக்கு பரவ வாய்ப்புள்ளது. அவ்வாறு பரவாமல் தடுக்க தாள்களின் மீது வைக்கோல் அல்லது நெல் பதா்களை சீராகப் பரப்பி எரித்து விட்டு, பின்னா் கோடை உழவு செய்வது நல்லது. விவசாயிகள் கோடை உழவின் நன்மைகளைஅறிந்து கிடைக்கும் மழையைப் பயன்படுத்தி கோடை உழவு செய்ய வேண்டும். பின்னா் சணப்பு, செஸ்பேனியா போன்ற பசுந்தாள் உரப்பயிா்களை தெளித்து பயன் பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com