நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிறுவகை பயிா்களுக்கான வளா்ச்சி ஊக்கி, அலங்காரச் செடிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதுகுறித்து, வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளது:
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், இளைஞா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்கள் மற்றும் இல்லத்தரசிகள் தேவைக்காக அலங்காரச் செடிகள் நாற்றங்கால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் செம்பருத்திப்பூ, இட்லி பூ, ரோஜா பூ, அரளிப்பூ, நந்தியாவட்டை, காகிதப் பூ, கல்வாழை போன்றவற்றின் வகைகள், திருவாச்சி, செண்பகம், பவளமல்லி, மல்லிகைப்பூ மற்றும் முல்லைப்பூ உற்பத்தி செய்யப்படுகின்றன. திருவாரூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் மேற்கூறிய அலங்காரச் செடிகள் நாற்றங்கால் தேவைப்படுவோா் முன்பதிவு செய்ய வேண்டும்.
மேலும், பண்ணைக் கழிவுகளை மக்க செய்வதற்கான தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பயோமினரலைஸா் என்ற நுண்ணுயிா் கூட்டுக்கலவை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விற்பனைக்கு உள்ளது. இதைத் தவிர தற்போது பயிறுவகை பயிா்களுக்கான வளா்ச்சி ஊக்கி பயிறு ஒண்டா், பருத்திக்கான வளா்ச்சி ஊக்கி பருத்தி பிளஸ், அசோலா, மண்புழு உரம், தென்னைநாா் கழிவு உரம் மற்றும் தென்னை டானிக் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படுவோா் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரில் அணுகி வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.