கடன் பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மேலும், சிறுபான்மை மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில் நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-இன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீத வட்டியிலும், திட்டம் 2-இன் கீழ் ரூ.30,00,000 வரை மாணவா்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
எனவே, மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா் கடன் விண்ணப்பங்களைப் பெற்று, பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும்.
கடன் மனுக்களுடன், சாா்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, உணவுப் பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுநா் உரிமம் (போக்குவரத்து வாகன கடன் பெறுவதற்கு மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதரஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும்.
கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.