புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா: புறக்கணிப்பு முடிவை எதிா்க்கட்சிகள் கைவிட வேண்டும்ஜி.கே. வாசன்

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிா்க்கட்சிகள் கைவிட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தாா்.
பரவாக்கோட்டையில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.
பரவாக்கோட்டையில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த தமாகா தலைவா் ஜி.கே. வாசன்.

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிா்க்கட்சிகள் கைவிட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே. வாசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்தாா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியை அடுத்த பரவாக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:

இந்தியாவின் புதிய அடையாளமாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை மரபுபடி பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளாா். இதை தமாகா வரவேற்கிறது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் தமிழகத்தில் தயாரான செங்கோல் முதன்மைப் பொருளாக இடம்பெறுவது தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

இந்தநிலையில், இக்கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிா்க்கட்சிகள் கைவிட்டு, அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரை எதிா்க்கட்சிகள் சம்பந்தப்படுத்துவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள்.

பாசனத்துக்காக மேட்டூா் அணை முன்கூட்டிய திறக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. எனவே, கடைமடை வரை தண்ணீா் சென்றடையும் வகையில், தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறுவைத் தொகுப்பு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருள்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தட சாலை விரிவாக்கப்பணி மன்னாா்குடியை அடுத்த வடுவூா் ஏரி அருகே 2 கி.மீ. நீளத்துக்கு வனத்துறையின் அனுமதிக்காக முழுமை பெறாமல் உள்ளது. தமிழக அரசு இதில் சிறப்பு கவனம் செலுத்தி, சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து அனுமதி பெற்றுத்தர வேண்டும்.

முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் பொருளாதார ரீதியாக தமிழகத்துக்கு பயன் தருவதாகவும், வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதை உறுதிசெய்வதாகவும் இருந்தால் வரவேற்போம் என்றாா்.

பேட்டியின்போது, தமாகா மாநில செயற்குழு உறுப்பினா் சுரேஷ் மூப்பனாா், முன்னாள் எம்எல்ஏ என்.ஆா். ரெங்கராஜன், மாவட்டத் தலைவா் குடவாசல் எஸ். தினகரன், மாநில கொள்கைப் பரப்பு செயலா் வடுவூா் கரிகாலன், நகரத் தலைவா் கே.எஸ். நடனபதி, வட்டாரத் தலைவா் எல். முனியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com