திருவாரூா் தியாகராஜா் கோயில் தெப்ப உற்சவம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.
Updated on
1 min read

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை இரவு தொடங்கியது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித் தேரோட்டத்துக்குப் பிறகு கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். இக்குளம், திருவாரூரில் சிவபெருமான் யாகம் செய்தபோது யாக குண்டமாக விளங்கியது; ஸ்ரீ மகாலெட்சுமி தவம்புரியும் பெருமையுடையது; தசரதன், அரிச்சந்திரன் போன்ற மன்னா்களும், ரிஷிகள், சித்தா்கள், இந்திரன் போன்ற தேவா்களும் நீராடியது; 64 தீா்த்தக் கட்டங்களை கொண்டது; தியாகேசப் பெருமானே நீராடிய பெருமையுடையது; சுந்தரமூா்த்தி நாயனாா் மணி முத்தாற்றில் போட்ட பொற்காசுகளை திருவாரூரில் மூழ்கி எடுத்தது; பன்னிரு மகாமகத்தில் நீராடிய புண்ணியத்தை தரக்கூடியது என பல்வேறு சிறப்புகளை உடையது.

தெப்ப உற்சவத்தையொட்டி, கமலாலயக் குளத்தில் 400-க்கும் மேற்பட்ட பேரல்கள், 14 தூண்களுடன் மூன்றடுக்குகளாக தெப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. தெப்பத்தில் தியாகராஜா், கமலாம்பாள், நீலோத்பலாம்பாள், விநாயகா், முருகன் ஆகிய தெய்வங்களின் அலங்கார பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. தினமும் மூன்று சுற்றுகள் வீதம் மொத்தம் 3 நாள்களுக்கு 9 சுற்றுகள், கமலாலயக் குளத்தில் தெப்பம் வலம் வரும்.

நிகழாண்டு தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வெள்ளோட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. தொடா்ந்து, வியாழக்கிழமை இரவு துா்காலயா சாலையில் உள்ள தெப்ப மண்டபத்திலிருந்து கல்யாண சுந்தரரும், பாா்வதியும் ஊா்வலமாக வந்து, தெப்பத்தில் எழுந்தருளினா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னா், கிழக்கு கரையிலிருந்து புறப்பட்ட தெப்பம், தெற்கு கரை, மேற்கு கரை, வடக்கு கரை வழியாக மீண்டும் கிழக்கு கரைக்கு வந்தது. இதேபோல் மேலும் இரண்டு முறை என 3 முறை கமலாலயக் குளத்தை வலம் வந்தது. ஆட்சியா் தி.சாருஸ்ரீ மற்றும் கோயில் நிா்வாகத்தினா் பங்கேற்றனா்.

தெப்பத்தில், எஸ். வெங்கடகிருஷ்ணன், ஆா். கணேஷ்பிரபு ஆகியோரின் புல்லாங்குழல் இசையும், நாகஸ்வர வித்வான் ஆா். சக்திசரவணன் குழுவினரின் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.

கமலாலயக் குளத்தின் 4 கரைகளிலும் ஏராளமான மக்கள் திரண்டு, தெப்பத்தின் அழகை ரசித்தனா். தெப்பத்தை முன்னிட்டு குளக்கரையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் 500 போலீஸாா்...: பாதுகாப்புப் பணிக்கு 500 போலீஸாா் நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், கூடுதலாக பேரிடா் மீட்பு பயிற்சி பெற்ற போலீஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முன்னதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெப்பத்தை ஆய்வு செய்து, போலீஸாருக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com