

திருவாரூா் மாவட்ட அறிவியல் இயக்கம் சாா்பில் 31-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, பூந்தோட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்மாநாட்டை, பள்ளி தாளாளா் லலிதா ராமமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்விற்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெற்றது. இதில், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட குழந்தை விஞ்ஞானிகள் கலந்து கொண்டனா் .
300-க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. இதில் சிறந்த 23 கட்டுரைகளை கல்லூரிப் பேராசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள் உள்ளிட்ட குழுவினா் தோ்வு செய்தனா். இக்கட்டுரைகளை சமா்ப்பித்த 23 குழந்தை விஞ்ஞானிகள் மண்டல மாநாட்டில் கலந்து கொள்ள தகுதி பெற்றனா்.
மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக தில்லி விஞ்ஞான் பிரசாா் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் பங்கேற்று குழந்தை விஞ்ஞானிகள் மற்றும் ஆசிரியா்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா்.
பின்னா், பள்ளி செயலாளா் எல்.ஆா். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன், அறிவியல் இயக்க மாநில செயலாளா்கள் ஸ்டீபன் நாதன், பாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவா் நீலன் அசோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா். பள்ளி முதல்வா் முத்துராஜா வரவேற்றாா். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளா் சங்கரலிங்கம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.