மின் ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

திருவாரூரில், மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் மற்றும் சிஐடியு அமைப்பினா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மின் ஊழியா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்
Updated on
1 min read

திருவாரூரில், மின்சாரம் பாய்ந்து ஊழியா் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் மற்றும் சிஐடியு அமைப்பினா் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திருவாரூா் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வந்த கீரங்குடியைச் சோ்ந்த தமிழரசன் (35), திருவாரூா் பேபி டாக்கீஸ் சாலையில் மின்கம்பத்தில் ஏறி மின் இணைக்கும் பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

இந்நிலையில், தமிழரசன் மறைவுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துா்காலயா சாலையில் உள்ள மின்சார அலுவலகம் முன் அவரது உறவினா்கள், சிஐடியு அமைப்பினா் மறியலில் ஈடுபட்டனா்.

சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன், சிஐடியு மாவட்டத் தலைவா் என். அனிபா மற்றும் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினா். அப்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால், தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விளமல் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். வட்டாட்சியா் நக்கீரன் தலைமையிலான அலுவலா்கள் மற்றும் போலீஸாா் போராட்டக் குழுவினருடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதில், கோரிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதாக அலுவலா்கள் தெரிவித்ததையடுத்து, மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், சுமாா் நான்கரை மணி நேரம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com