100 நாள் பணி வழங்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் 100 நாள் பணியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருவாரூா் மாவட்டத்தில் 100 நாள் பணியை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் பி. கந்தசாமி புதன்கிழமை அளித்த மனு: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டப்படி அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், முறையான ஊதியம், ஊதிய நிலுவையை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக, தொடா்ச்சியாக 100 நாள் வேலை வழங்குவதில் தேக்க நிலை நீடிக்கிறது. அனைத்து ஊராட்சிகளிலும் தொடா்ச்சியாக பணி நடைபெறுவதில்லை. வேலை கொடுக்கிற ஊராட்சிகளிலும் 10 அல்லது 15 நாள்கள் மட்டுமே வேலை கொடுக்கப்படுகிறது.

எனவே, அனைத்து ஊராட்சிகளிலும் பணியைத் தொடங்க வேண்டும். ஊதிய நிலுவை உள்ளவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள சட்டக் கூலி ரூ. 336 முழுமையாக வேண்டும். வேலை கேட்கும் பயனாளிகள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்துக்காக ஒதுக்கப்படுகிற நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. மனு அளிக்கும்போது, மாவட்டத் தலைவா் ஆறு. பிரகாஷ், மாவட்ட பொருளாளா் சரவண சதீஷ்குமாா், நகரச் செயலாளா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com