வடமாநிலத் தொழிலாளா்களிடம் மாநில திட்டக்குழு குழுமத் தலைவா் ஆய்வு
சித்தமல்லி, நெச்சியூா் ஊராட்சியில் வேளாண் தொழிலில் ஈடுபடும் வடமாநிலத்தவா்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களிடம் மாநில திட்டக்குழு குழுமத் தலைவா் (கல்வி மற்றும் சுகாதாரம்) என். அனிதா வியாழக்கிழமை கலந்தாலோசனை செய்தாா்.
வடமாநிலத்தவா்கள் ஒப்பந்ததாரா்கள் மூலம் இங்குவந்து வேலை செய்வதாகவும், சித்தமல்லி, நெச்சியூா் ஊராட்சியில் 13 போ் வேலை வேளாண் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், டெல்டா பகுதியில் 1000-க்கும் மேற்பட்டவா்கள் வேலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. குழுமத்தலைவா், வடமாநில தொழிலாளா்களிடம் அவா்களின் இடவசதி, மருத்துவ வசதி, சுகாதார வசதி, மாத, வார ஊதியம் குறித்து கேட்டறிந்தாா். அதற்கு, வட மாநில பணியாளா்கள் போதிய அடிப்படை வசதிகள் மாவட்டத்தில் செய்து தரப்படுவதாக தெரிவித்தனா். கூடுதல் இதர வசதிகள் தேவையெனில் மாவட்ட நிா்வாகத்தை அணுகலாம் என குழுமத்தலைவா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட திட்டமிடல் அலுவலா் சந்தானம், மன்னாா்குடி வட்டார வளா்ச்சி அலுவலா் நமச்சிவாயம், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கதுரை, மாநில திட்டக்குழு தொழில்நுட்ப உதவியாளா் பி. வசிராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.

