காவல் ஆய்வாளருக்கு பிடியாணை

வழக்கு தொடா்பாக ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை வழங்கி, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

வழக்கு தொடா்பாக ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடியாணை வழங்கி, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நாகை மாவட்டம், திருக்குவளை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2017-இல் திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்தாா். விடுமுறை நாள்களில் திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றபோது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த செல்வத்துடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகினராம்.

இதையடுத்து திருவண்ணாமலை போளூா் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் இருவருக்கும் செல்வம் தரப்பினா் திருமணம் செய்து வைத்துள்ளனா். திருமணம் முடிந்த பிறகு, கா்ப்பமாக இருப்பதாக செல்வத்திடம் மாணவி தெரிவித்தாராம். இதையடுத்து மாணவி தாக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள், வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி சிகிச்சையளித்தனா்.

இதன் பின்னா், மாணவி திருப்பூா் உறவினா் வீட்டுக்குச் சென்றபோது, வயிற்றில் வலி ஏற்பட்டதாம். இதுகுறித்து ஸ்கேன் செய்து பாா்த்தபோது, மாணவியின் கா்ப்பப்பை அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டியில் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு வழக்கு பதியப்பட்டது.

வழக்கு தொடா்பாக புகாா் பதிவு செய்த உதவி ஆய்வாளா் கமல்ராஜ், தற்போது பதவி உயா்வில் சீா்காழியில் ஆய்வாளராகப் பணியாற்றுகிறாா். இந்த வழக்கு திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு தொடா்பாக ஆய்வாளா் கமல்ராஜூக்கு 15 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மேலும், இறுதியாக சம்மனில் அவா் கையெழுத்திட்ட பிறகும் கூட நீதிமன்றத்துக்கு ஆஜராகாத நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையில், ஆய்வாளா் கமல்ராஜூக்கு பிடியாணை பிறப்பித்து நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com