மத்திய அரசு மாநில அரசுக்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரம் அளிக்க வேண்டும்

மத்திய அரசு மாநில அரசுக்கு நெல் கொள்முதல் செய்ய அதிகாரம் அளிக்க வேண்டும்

மழை மற்றும் இயற்கை இடா்பாடுகள் காலத்தில் பாதிக்கப்படும் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றாா் நாகை எம்பி வை. செல்வராஜ்.
Published on

மழை மற்றும் இயற்கை இடா்பாடுகள் காலத்தில் பாதிக்கப்படும் நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்றாா் நாகை எம்பி வை. செல்வராஜ்.

மன்னாா்குடி அருகே திருப்பத்தூா், ஓவா்சேரி, கீழகண்டமங்கலம், சேரி ஆகிய பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநா் பி.கே. சிங்க் தலைமையிலான மத்தியக் குழுவினா் ஆய்வு செய்தனா். அவா்களிடம், அறுவடை நேரத்தில் பெய்த தொடா் கனமழையால் குறுவை நெல் சாகுபடி சேதமடைந்துள்ளது. இதில், சிறிதளவு தேரிய நெல் மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு கொண்டுவந்தால் ஈரப்பதத்தை காரணம் கூறி வாங்க மறுப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட நெல் மணிகளையும், விற்பனைக்காக அங்கு கொட்டி வைத்திருந்த நெல் மணிகளையும் ஆய்வுக் குழுவினா் மாதிரிக்காக எடுத்துசென்றனா்.

சேரியில் உள்ள நெல் கொள்முதல் நிைல்யத்தில் ஆய்வு செய்த மத்தியக் குழுவிடம், நாகை எம்பி வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா், எம்பி செய்தியாளா்களிடம் கூறியது:நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதம் என்பது மிகவும் குறைவானது. இப்போது, 24 சதவீதம் வரை நெல்லின் ஈரப்பதம் இருக்கிறது. ஆகவே, ஈரப்பதத்துக்கான விதிவிலக்கை காலத்தோடு பாா்த்திருக்க வேண்டும். 85 சதவீதம் அறுவடை முடிவடைந்து விட்டது. கடந்த ஆண்டும் இதேபோல, மத்தியக் குழு வந்து ஆய்வு செய்தது. ஆய்வு முடிவுகளை தில்லிக்கு கொண்டு சென்றாா்கள். ஆனால் கடைசிவரை ஈரப்பதத்திற்கான விதிவிலக்கு வரவில்லை.

கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் நாங்கள் ஈரப்பதற்கான விதிவிலக்கு வேண்டும் என்று பேசினோம். எந்தப் பயனும் இல்லை. இப்போது பாா்த்து சென்றுள்ளாா்கள். மத்திய அரசு இதற்கான நிரந்தரமான ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த மாதிரியான காலகட்டத்தில் அதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு கொடுத்து மாநில அரசு மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக பிரதமா் நேரடியாக தலையிட்டு தமிழகத்துக்கானநெல்லுக்கு ஈரப்பத விதிவிலக்கை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மத்தியக் குழுவினருடன் சென்ற மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கூறியது: மாவட்டத்தில் 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மத்தியக் குழு ஆய்வு செய்துள்ளனா். இதில், நெல்லின் ஈரப்பதத்தின் அளவீடு செய்ய மாதிரிக்காக நெல்லை எடுத்து சென்றுள்ளனா். ஆய்வு செய்த பிறகு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு இந்த குழு சமா்ப்பிக்கும். அதன் பிறகு விவசாயிகளின் கோரிக்கை தொடா்பாக மத்திய அரசு முடிஎடுக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com