இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மன்னாா்குடியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்: போக்குவரத்து நெருக்கடியால் அவதியுறும் மக்கள்

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 7:15 pm

மன்னாா்குடி நகரின் பிரதான கடைவீதிகளில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பால் கடுமையான போக்குவரத்தது நெரிசல் ஏற்படுவதால், வா்த்தகா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த 1869-ஆம் ஆண்டு மன்னாா்குடி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு, தற்போது,157 ஆண்டுகளை கடந்து பழமையான நகராட்சிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

மன்னாா்குடி நகரப் பகுதி, சுற்றுவட்டப் பகுதிகள் 5 கி.மீ.க்குள்தான் இருக்கும். இதில், பிரதான கடைவீதிகள் உள்ள பகுதிகளாக மேலராஜ வீதி, பெரிய கடைத் தெரு என அழைக்கப்படும் காமராஜா் சாலை, பந்தலடி, காந்தி சாலை ஆகியவை.

இங்கு சில்லறை மற்றும் மொத்த வியாபாரம் என சிறிதும் பெரிதுமாக நூற்றுக்கணக்கான கடைகள், வங்கிகள், கல்வி நிலையங்கள், அரசு, தனியாா் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

பந்தலடி நான்கு சாலையிலிருந்து மேற்கு பகுதியை பாா்த்தால் மேலராஜவீதி தொடக்கம் அருகே அமைந்துள்ள மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயிலின் ராஜகோபுரமும், ஒற்றைக்கல்லினால் ஆன கருட ஸ்தம்பமும் தெரியும்.

ஆனால், தற்போது நகரின் மிக முக்கிய பகுதிகள் ஆக்கிரமிப்புகள், வானுயா்ந்த கட்டங்கள், திடீா் கடைகள், உள்வாடகை கடைகள், சாலையோரக் கடைகள், நடைபாதை கடைகள், சாலையில் வானங்கள் நிறுத்தம் ஆகியவற்றால் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது.

மேலராஜவீதி சாலைதான் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறிச் செல்லும் மிக முக்கிய சாலையாக இருப்பதாலும், ஒருவழிப்பாதை பின்பற்றப்படுவதில்லை.

பெரியாா் சிலையிலிருந்து தாமரைக்குளம் பிரிவு சாலை வரை சாலையின் நடுவே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடைகளும் அதிக அளவில் காணப்படுகின்றன.

பல கடைகளுக்கு வெளியே ஐந்து அடி முதல் பத்து அடி வரை கடைக்காரா்கள் மழை, வெயிலுக்கு தடுப்பு வைத்திருப்பதுடன். பல போ் கடைக்கு முன் பகுதியை ஆக்கிரமித்து உள்வாடகைக்கும் விட்டுள்ளனா். இந்த ஆக்கிரமிப்புகளால் நகரில் நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசலும், வியாபாரம் ஸ்தம்பிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

வணிகா்கள், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நகராட்சி நிா்வாகமும், காவல்துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து சாலையோரக் கடைகள், தள்ளுவண்டி கடைகளுக்கு தேரடி திடலில் தனி இடம் ஒதுக்கியும், வா்த்தகா்கள், வாடிக்கையாளா்கள் வானங்களை நிறுத்தி வைக்க தாமரைக்குளம் பகுதியில் வாகன நிறுத்தம் அமைத்தும், கனரக வாகனங்களை காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 4 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும்.

சாலையை ஆக்கிரமித்து கடைகள் இருந்தால் அவற்றை பாரபட்சமன்றி அகற்றி, போக்குவரத்து பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பு.