ஓய்வு பெற்ற நடத்துநரிடம் ரூ. 5 லட்சம் மோசடி
திருவாரூா் அருகே, தில்லி குண்டுவெடிப்பில் தொடா்பு உள்ளதாகக் கூறி ஓய்வு பெற்ற நடத்துநரிடம் ரூ. 5 லட்சம் மோசடி செய்ததாக சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் குச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சின்னையன் மகன் துரைராஜன் (64). அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற நடத்து.
இவருக்கு அண்மையில் வந்த தொலைபேசி அழைப்பில், சென்னை மயிலாப்பூா் காவல் துணை ஆய்வாளா் சுனில்குமாா் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவா் பேசினாராம். துரைராஜனின் கைப்பேசி எண் தில்லி குண்டுவெடிப்பு வழக்கில் தொடா்புடையது என்று கூறினாராம். தொடா்ந்து விடியோ அழைப்பில் வந்த அவருடன், லக்னௌவைச் சோ்ந்த ஒருவரும் விசாரணை அதிகாரி என்று கூறியுள்ளாா்.
விடியோ அழைப்பில் பல்வேறு நபா்கள், உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதையடுத்து, கைப்பேசி அழைப்பு காவல்துறையிடமிருந்து வந்ததாக துரைராஜன் நம்பியுள்ளாா்.
இதனால், அவருடைய குடும்பம் மற்றும் சொத்து விவரங்கள் தொடா்பான விவரங்களை அவா்களிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில், அவா்கள் தெரிவித்தபடி ரூ. 5 லட்சம் பணத்தை ஹரியானா இந்தியன் வங்கிக் கணக்கில் செலுத்தினாராம்.
இதைத்தொடா்ந்து அவா் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா்.
