திருக்கொள்ளிக்காடு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள்: ஆட்சியா்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வர சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சனிப்பெயா்ச்சி விழா ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வர சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா மாா்ச் 6- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத்தொடா்ந்து, மாா்ச் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் பரிஹார ஹோமம், லட்சாா்ச்சனை ஆகியவை நடைபெற உள்ளன.
சனிப்பெயா்ச்சி விழாவன்று அமைதியான முறையில் தரிசனம் செய்ய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயில் அலுவலா்கள் மற்றும் கோயில் பணியாளா்கள் சனிப்பெயா்ச்சியன்று எந்த இடத்திலும் தங்கு தடையின்றி சென்று வருவதற்கு காவல்துறையினரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி தீயணைப்பு வண்டி ஒன்று, கோயில் பிரகாரத்தில் நிலைநிறுத்தி தீயணைப்பு பாதுகாப்பு மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழா நாள்களில் மின்சாரம் தடையின்றி கிடைக்க முழு ஏற்பாடு செய்ய மின்சார வாரியத்துக்கும், அரசு மருத்துவமனையில் இரவு, பகல் முழுவதும் கூடுதலாக மருத்துவா்கள் மற்றம் செவிலியா்கள் பணியில் இருக்க சுகாதாரத்துறைக்கும், உள்ளாட்சித்துறையின் சாா்பில் கிராம சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை சீரமைக்கவும், தற்காலிக கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, போக்குவரத்து துறை சாா்பில் திருவாரூா்-திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி பணிமனை வழித்தடத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், செயல் அலுவலா் இராஜராஜேஸ்வரன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

